முள்ளி வாய்காலில் இன அடையாளங்களை அழிக்க கடைசி கொள்ளியை வைக்கும் திட்டத்தில் இருந்தது இலங்கையின் இன வெறி அரசு. ஓராண்டுக் காலம் இடப் பெயர்வால் பெரும் துயரில் இருந்த மக்களை முள்ளி வாய்க்கால் வந்து சேருமாறு அரசு தரப்பில் கூறினார்கள். குண்டு வீச்சுக்கள் இல்லாத பிரதேசங்கள் என்று சில பகுதிகளும் அறிவிக்கப் பட்டிருந்தன. ஹிட்லர், யூத மக்களை இவ்வாறுதான் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துவருவதாக கூறினான். குழந்தைகளுடன் யூத மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கு வந்து சேர்ந்தார்கள். போர் தந்த கொடுமையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். ஒரு பெரு வெளியின் வாசற்கதவு , அவர்களை தன வாய் திறந்து அழைத்தது. சாட்சியங்கள் எதுவுமே இல்லாமல் யூத மக்களை கொன்று குவித்த விஷ வாயு கூடம் அது.
இலங்கை அரசு அறிவித்திருந்த, குண்டுகள் வெடிக்காத பிரதேசத்திற்கும் அந்த விஷ வாயு கூடங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. விஷ வாயு கூடங்களை நான்கு புறமும் விஷ வாயு வெளியேறாதவாறு அமைத்திருப்பார்கள்.
யாருமே அங்கிருந்து தப்பிச் செல்லமுடியாது. முள்ளி வாய்க்கால் பிரதேசமும் யாரும் எங்கும் தப்பித்துக் கொள்ளாதவாறு அமைந்த நிலப் பகுதி. ஒரு புறம் நந்திக் கடல் , மறுபுறம் பெருங்கடல் இதற்கு இடைப் பட்ட பகுதியில்தான் மக்கள் சிக்கவைக்கப் பட்டார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். இலங்கை அரசு சார்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு கூட அங்கு அனுமதி இல்லை. ஏன் ?
சாட்சிகளற்ற பிரதேசமாக இருக்கவேண்டுமென்பது இலங்கை அரசின் உள்ளடி தந்திரம். குறுகிய இந்த நிலப் பரப்பின் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிக்கப் பட்டிருந்தார்கள்.
மனிதர்கள் இல்லாத வேவு விமாங்கள் அனுப்பப்பட்டு, எல்லா விவரங்களையும் இவர்கள் முன்கூட்டியே சேகரித்துக் கொண்டார்கள். நான்கு புறமும் கவச வாகனப் படைகள் சூழ்ந்து நின்றன. பல் குழல் பீரங்கிகள் தொடர்ந்து அக்னி குண்டுகளை உமிழ்ந்து கொண்டே இருந்தன. வான்வழியே விமானங்கள் எட்டிப் பார்த்து மக்கள் குவிந்துள்ள இடங்களில் குண்டுகளைப் போட்டுக் கொண்டே இருந்தன. பூமி அதிர்ந்தது. கடலலைகள் அச்சமுற்று நின்றன. இதுதான் முள்ளி வாய்க்காலில் தமிழ் மக்கள் சந்தித்த கோரமான கொடுமை. !
"பிணங்கள் சூழ்ந்த பிரதேசம்
ஜனக் கடலில் மிதந்தவை
களத்தில் இரந்தவை
கண்ட கண்ட இடமெல்லாம்
வெந்தவை, கிடந்தவை
அழுகிச் சிதைந்தவை"
என்று தமிழர் வாழ்க்கைப் பற்றி 1985 ம் ஆண்டு , ஈழத்துக் கவிஞர் மு. பொன்னம்பலம் பாடிய வரிகள்தான், இப்போது ஞாபகத்திற்கு வருகின்றன.
மைந்தர்கள் மட்டும்தான் மரணமடைகிறார்கள். மண்ணுக்கான போராட்டங்கள் மரணமடைவதில்லை. அவை தற்காலிகமாக முறியடிக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன.
ஆனாலும் லட்சியத்தின் நுழைவாயிலில் அடியெடுத்து வைப்பதற்கு பல தலைமுறைகள் அவை காத்திருக்கின்றன. எல்லாமே அழிந்துவிட்டதென்று எதிரிகள் நிம்மதி கொள்ளும் நேரத்தில், யாருமே எதிர்பார்க்காத தருணத்தில், அடி மரம் கிளை வெடித்து, தளிர் அவிழ்த்து, பூ பூகத் தொடங்கி விடுகின்றன. ....
வரலாறு, அந்தந்த போராட்டங்களுக்கான வசந்த காலத்தை எங்கோ ஓரிடத்தில் மறைத்து வைத்துள்ளது என்பது மட்டும் உண்மை. விழுந்து விட்டதாக கருதப்படும் ஈழ மக்களின் போராட்டத்துக்கான வசந்த காலமும் காலப் பெருவெளியில் எங்கோ ஓரிடத்தில் இருக்கத்தான் செய்யும்.
ஜனநாயக சுவாசத்தை மானுடத்துக்கு வழங்கியது பிரஞ்சு புரட்சி. ஆதங்கங்கள் அனைத்தையும் கிழித்தெறிந்து , விடுதலை பெற்ற தேசிய இனங்கள் எல்லாம், முழுவதும் அழிந்துவிட்டனவோ என்ற அச்சதிருக்கு பின்னர்தான், உயிர் பிடித்து தலை நிமிர்த்து எழுந்து , தங்கள் வாளுவுரிமையை சாதியப் படுத்திக் கொண்டன. நானூறு ஆண்டுகள் போராடி , தங்கள் உரிமையைப் பெற்ற அயர்லாந்தை இதற்கு உதாரணமாக கூற முடியும். இதைப் போலவே பெல்ஜியத்தில் பிளமிஸ் மக்களும், பின்லாந்தில் பிநீஸ் மக்களும், ஸ்பெயினில் பாஸ்க் மக்களும் தங்கள் தாயக உரிமைக்காக நூற்றாண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றியின் விளிம்பை இப்போது தொட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.
இன அழிப்பு அரசியல், சித்தரிப்பதைப் போல இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டம் நிகழ்காலத்தின் வன்முறை அல்ல. காலத்தால் அழிந்துபோகாத மண்ணுரிமைப் போராட்டம். வரலாறு அறிந்த காலம் முதல் மண்ணில் கால் பதிதவர்களின் உரிமைக் குரல் இது. இவர்களை விரட்டி அடிப்பது என்றால் யார்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? முத்துகுமார்களுக்கு உயிர், தமிழ் மக்களின் உரிமைக் காக்கும் ஆயுதம் என்றால், ஈழ மக்கள் உயிராயுதம் எந்த மாட்டார்களா என்ன? மக்கள் பல்லாயிரமாக முள்ளி வாய்க்காலில் நெஞ்சுரம் கொண்டு நின்றாகள்.
இலங்கை மண்ணில், பழங்காலத்திலேயே தமிழ் மக்கள் வேர் பிடித்து வளர்ச்சி பெற்றிருந்தார்கள். தமிழ் மக்களின் பண்பாட்டைப் போலவே, அந்த மண்ணில் ஆழ புதைந்து கிடக்கும் புதைப் பொருள்களும் கல்வெட்டுகளும் அதற்கான ஆதாரத்தை தருகின்றன. தமிழகத்தின் நிலப் பகுதியில் இருந்து 70000 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த இலங்கைத் தீவு, தமிழ் தோல் குடிகளை தம் மார்பில் வளர்த்தெடுத்த தாய்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி படக் கூறுகிறார்கள்.
சிந்து சமவெளி நாகரிகத்தை விட தாமிர பரணி கரை அமைந்த ஆதிச்ச நல்லூர், முந்தையது என்பதற்கும் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதிச்ச நல்லூர் மண்பாண்டங்களில் காணப்படும் எழுத்துக்களும் ஈழத்தில் காணப்படும் மண்பாண்ட எழுத்துக்களும் உருவ ஒற்றுமையில் ஒன்றுபோல இருக்கின்றன. இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சி, சம காலத்தில்தான் வளர்ந்து வளர்ச்சி பெற்றுள்ளது. ஐரோப்பியர்கள் இலங்கையை கைப் பற்றிக்கொள்ளும் வரை தமிழ் மக்களுக்கென்று ஒரு தனி நாடு, இலங்கையில் இருந்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள்.
மானுடத்தை வெட்கித் தலை குனியவைத்த முள்ளி வாய்க்கால் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையும் உலக சமுதாயமும் தடுக்க முடியாத குற்றத்திற்காக இன்று தலை குனிந்து நிற்கின்றன. இது போற்குற்றம்தான் என்று உலக மனித உரிமை அமைப்புகள் ஒன்று கூடி ஒரே குரலில் சொல்லுகின்றன. தொலைக் காட்சிகளில் இந்த கொடுமையைப் பார்த்தவர்கள், செய்திகளாக இதைப் படித்தவர்கள் , உறக்கமற்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராஜபக்சேயின் உலகம் அதை வெற்றிக் கொண்டாட்டமாக மாற்றி விட்டது. தமிழ் மக்களின் அழிவு பற்றிய வெற்றிப் பாடல்களை அங்கு பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றி அடைந்தவர்களுக்கு பாடல்கள் உண்டு என்றால், தோற்றுப் போனவர்களுக்கு மட்டும் பாடல்கள் இல்லையா? வெற்றிப் பாடல்கள போதை கொண்டு மயக்கத்துடன் நடன அரங்குகளில் வெறி பிடித்து ஆடுகின்றன. தோற்றுப் போனவர்களின் பாடலோ, வைராக்கியத்தை நெஞ்சில் சுமந்து மரணத்தில் இருந்து புதியப் பிறப்பை கரு கொண்டு, பெற்றெடுக்க சூழ் வலி கொண்டு நிற்கிறது.
"வீழ்வேனென்று நினைத்தாயோ" என்று முள்ளி வாய்க்கால் விதைப்பதை விதைத்து முடித்துவிட்டு, அறுவடைக்காக காத்து நிற்கிறது!
-வெல்க தமிழ் ஈழம்!



