Friday, October 21, 2011

வீழ்வேனென்று நினைத்தாயோ..!

அந்த அறிக்கை 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. முழு அழிவு நடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான அறிக்கை அது. இடம் பெயர்ந்த தமிழ் மக்கள், முற்றாக அழிந்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்ளத் தக்க வகையில் தாக்குதல் தொடுக்கப் பட்டிருந்த நேரம் அது. வெகு மக்களுக்கான உணவை வாங்கும் பொறுப்பைப் பெற்றிருந்த முல்லைத் தீவு மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்தான் அந்தக் கடிதத்தை எழுதி இருந்தார். மனித துயரங்களை காண சகிக்க முடியாமல் அவர் எழுதிய இந்தக் கடிதம்,  மன சாட்சி உள்ள மனிதர்களை உலுக்கி எடுத்து விடுகிறது. 
     "உணவு கிடைக்காமல் தொடர்ந்து மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். காட்டுக் கிழங்குகளையும் இழை தழைகளையும் உண்டு , உயிர் பிழைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனாலும், தங்களின் சாவை அவர்களால் நிறுத்த முடியவில்லை. பட்டினி சாவுகள் அதிகரிக்கின்றன. மருத்துவ மனைக்கு தூக்கி வரப் படுகிறவர்களில் பலர் இறந்தேதான் கொண்டு வரப் படுகிறார்கள். இவர்களில் பெரும் பாலானோர் பட்டினியால் செத்தவர்கள் என்று கண்டறியப் பட்டுள்ளது. இது நாளாக நாளாக இன்னமும் கூடுதலாகலாம்." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த, பட்டினியால் செத்து போனவர்களை மட்டும்தான் எங்களால் கணக்கிட்டு சொல்ல முடிகிறது. மற்றவர்களை இந்த கணக்கில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மைதான். ..... பதுங்கு குழிகளில், சாலைகளில், புதர் மறைவிடங்களில் இருந்தபடி பசித் தீ பற்றிக் கொள்ள அப்படியே சாய்ந்து மரணமுற்றவர்களின் கணக்கு யாரிடம் இருக்கிறது? 
     பட்டினி ஒரு வன்முறை. ஆதிக்க சக்திகள் தங்கள் அதிகாரத்துக்கு, வெகு மக்களை அடிமைப் படுத்திக் கொள்ள பட்டினி போட்டு பார்கிறார்கள். இன ஒடுக்கு முறையின் மூலம் தமிழ் மக்களை அடிமையாக்கி கொள்ள மோன்று வரும் இலங்கை, குண்டு போட்டு அழிப்பதற்கு இணையாக பட்டினி போட்டு அழிப்பதையும் ஒரு கொள்கையாகவே உருவாக்கி வைத்துள்ளது. உள்நாட்டுப் போரும், இடப் பெயர்வும் பதுங்கு குழிகளும் வெளி உலகுக்கு எதுவுமே தெரியாமல் பட்டினி கொலை செய்வதற்கு, இலங்கையின் இன வெறி அரசிற்கு வசதி செய்து கொடுத்து விட்டது. 
     முள்ளி வாய்க்காலுக்கு முந்தைய இடப் பெயர்வு காலத்தில், போர்களத்தில் சிக்கியுள்ள மக்கள் தொகையைப் பற்றி, இலங்கையின் இராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது. 2009 ம் ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் வெளியான இந்த அறிக்கையின் படி, 70000 மக்கள் இருந்ததாக சொல்லியிருந்தாகள். இது உண்மையானது தானா என்ற கேள்வி எழுந்தபோது, மற்றொரு தகவல் கிடைத்தது. அந்த தகவல் மிகுந்த அதிர்ச்சியைத் தரதக்கதாக இருந்தது. அரசாங்கம் வகுத்திருந்த அருவருக்கத் தக்க சூழ்ச்சி ஒன்று அதில் மறைந்து இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. 
    ஆட்சியாளரின் கணக்கெடுப்பின் படி , 2008 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் கிளிநொச்சி , வன்னி ஆகிய இரு மாவட்டங்களின் மொத மக்கள் தொகை 420000 . நான்கு மாதங்களில் இது எவ்வாறு 70000 ஆக குறைந்து போனது என்ற கேள்வி இயல்பாகவே எழும். இலங்கை அரசுதான் பொறுபேற்றுள்ள உணவு விநியோகத்தைக் குறைத்துக் கொள்ளவும், ஐக்கிய நாடுகளின் சபையின் வழி காட்டுதலில் வழங்க வேண்டிய உணவுப் பொருட்கள் பாதிக்கப் பட்ட மக்களுக்கு செல்வதை தடுக்கவும், இப்படி பொய்யான புள்ளி விவரத்தை வெளியிட்டு இருந்தது. பட்டினியால் மக்கள் செத்துப் போக வேண்டும் என்பதை தவிர, இதில் வேறு என்ன நோக்கம் இருக்க முடியும் ?
    பட்டினி saavup பற்றிய இந்த அறிக்கைப் போலவே உணவு கையிருப்பு பற்றிய மற்றொரு அறிக்கையும், வன்னியில் இருந்து இலங்கை அரசுக்கு அனுப்பபட்டிருந்தது. கிளி நொச்சி மண்டபத்தில் உணவுப் பொருள் வழங்கும் துறையின் துணை இயக்குனர் அனுப்பிய அவசர அறிக்கை அது. இதை ஒரு அபாய அறிவிப்பு என்றுதான் கருத வேண்டும். 2009 ம் ஆண்டு பெப்ரவரி 2009 ம் தேதி இந்த அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. 83000 ம் குடும்பங்களுக்கு உணவு அளிக்க வேண்டிய poruppu எனக்கு இருக்கிறது. இதற்க்கு 4950 மெட்ரிக் டன் எடை உள்ள உணவுப் பொருட்கள் தேவை. ஆனால், கையிருப்பில் உள்ளது 110  மெட்ரிக் டன் மட்டுமே" என்று கூறுகிறது அந்த அவசர அறிக்கை. இதை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால்,  மக்களின் தேவையில் அரை சதவிகித உணவு கூட அவர்களின் கையிருப்பில் இல்லை என்று தெரிகிறது. அதைக் கிட்டத் தட்ட உணவற்ற நிலை என்றுதான் கூறவேண்டும். இது பிப்ரவரி மாத கடைசி nilavaram என்றால் , யுத்தத்தின் இறுதிக் கட்டமான மே மாத இரண்டாவது , மூன்றாவது வாரங்களில் என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடிவதில்லை. 
     ஒரு பிடி உணவுக்காக அந்த மக்கள் பட்ட அவலங்கள் வார்த்தைகளில் விவரிக்க கூடியவையாக இல்லை. வயது முதிர்ந்த தாய் ஒருத்தி தாம் அடைந்த துயரங்களை இணைய தளம் ஒன்றில் பதிவு செய்திருக்கிறாள். தாது வருடப்  பஞ்சம் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  வறண்டு வெடித்த நிலங்களில் நீர் அற்றுப் போக, மாட்டுக்கு வைக்கப் படும் தவிட்டில் ஒளிந்து இருக்கும் அரிசிக் குருணையை தேடித் பிடிக்க alainthu திரிந்ததாக கதைகள் உண்டு. தவிட்டை மேலும் மாவாக்கி அதை அடுப்பில் சூடேற்றி கோரப் பசியைத் தனித்துக் கொண்டதாகவும் பஞ்சம் பற்றிய தகவல்கள் கூறுகின்றன. ஈழப் போரில் கடைசிக் கட்டத்தில், தாது வருஷத்துப் பஞ்சத்தை விட உணவுப் பஞ்சம் கூடுதலாகிவிட்டது என்பதை அந்த thaayin வார்த்தைகள் உறுதிப் படுத்துகின்றன. 
    "நஞ்சை வயல் வெளிகள் அமைந்த வன்னி நிலப் பரப்பில் அரைத்து நெல்லை அரிசியாக மாற்றித் தரும் ஆலைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஒதுக்குப் புறங்களில் நெல் அரைத்த தவிடும், உமியும் அம்பாரமாக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. உணவு இன்றித் தவித்த நாங்கள் , அதைப் பார்த்தோம். பெண்கள் பெரும் கூடமாக விரைந்து சென்றோம். தவிடு , உமி நடுவே கொஞ்சமேனும் அரிசி கிடைக்குமா என்றுப் பார்த்தோம். காற்றில் தூற்றிப் புடைத்துப் பார்த்து அதிலிருந்து அரிசிக் குருனையைப் பிரித்து எடுப்பதற்கு பெரும் பாடு பட்டோம். 
    உச்சி வெயிலில் பூமி அனலை கக்கி கொண்டு இருக்கிறது. இரைச்சல் கேட்கிறது. விமானமா? எல்லோரையும் திகில் பற்றிக் கொண்டது. வயிற்றுப் பசியா..அல்லது மரணமா .. ? பசியால் துடி துடிக்கும் பொடுசுகளைப் பற்றிதான் யோசனை. குண்டுகள் விழுந்து, செத்தாலும் பரவாயில்லை என்று மன பயத்தை அடித்து துரத்தி விட்டு, குழந்தைகள் உயிர் பிழைக்கும் ஒரு குவளை கஞ்சிக்காக, அந்த தவிடும் உமியும் குவிந்து உள்ள பொதிகளோடு போராட்டம் நடத்தினோம். சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வைப் பெருக்கெடுத்து ஓடியது. உடல் கலைத்து, கண்கள் இருளடைந்தன. புடைக்கும் murathai இறுகப் பற்றிக் கொண்டோம். நம் சந்ததி உயிர் பிழைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன்" என்கிறார் அந்த வயது முதிர்ந்த தாய்.
    நான்கு மணி நேரம் புடைத்து எடுத்தாலும் இரண்டு படி அரிசி குரனையை சேகரிப்பதில் கூட மிகவும் கடினமானதே. என்று அவர்கள் கூறுகிறார்கள். கிளி நொச்சியில் ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அவர்கள் புறப்பட்டபோது , ஒரு கிலோ அரிசி 40  விற்றதாக கூறப் படுகிறது. மே மாதம் 10  ம் தேதிக்கு மேல் , ஒரு கிலோ அரிசி 1000  ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. கடைசி நேரத்தில் குடும்பத்தின் பசியைப் போக்க தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிள்-ஐ விற்று , இரண்டு படி அரிசியை ஒருவர் வாங்கினார்  என்ற தகவல் நமக்கு மயக்கத்தை  வரவழைக்கிறது
                                                                                                                            (விதைப்போம்)
 
 


No comments:

Post a Comment